/tamil-ie/media/media_files/uploads/2023/02/New-Project24.jpg)
தர்மபுரியில் கடந்த 5-ம் தேதி பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்சிலிப் வனப் பகுதியில் விடப்பட்ட மக்னா காட்டு யானை வனப் பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்ததால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் மக்னா காட்டு யானை ஒன்று ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வந்தது. பொள்ளாச்சியை அடுத்த கோழிகமுத்தி முகாமில் இருந்து கும்கி யானை சின்ன தம்பி மற்றும் குழுவினர் வரவழைக்கப்பட்டு கடந்த 5-ம் தேதி வனத்துறையினர் யானையைப் பிடித்தனர். பின்னர், டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு வனப் பகுதியில் 6-ம் தேதி அன்று விடப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் தனி குழு அமைத்து அந்த மக்னா காட்டு யானையை கண்காணித்து வந்த நிலையில் நேற்று இரவு அந்த யானை வனத்தை விட்டு வெளியேறி சேத்துமடை கிராமத்தில் நுழைந்தது. அங்கிருந்து நல்லூத்துக்குளி, கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி, உள்ளிட கிராமங்களை கடந்து சென்றுள்ளது. தற்போது மன்னூர் ராமநாதபுரம் கிராமத்தில் யானை உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி வனச்சரக அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து யானையை கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து யானை நடைபயணமாகவே உள்ளதால் வனத் துறையினர் பின்தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.