மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் சிண்டேவை விமர்சித்த ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் காம்ரா வானூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
மகாராஷ்டிராவின் பிரபல யூடியூபரும் அரசியல் நையாண்டி கர்த்தாவுமான குணால் காம்ரா மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் ஏக்நாத் சிண்டேவை விமர்சனம் செய்திருந்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநித் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மும்பையில் இருந்த குணால் காமராவின் அலுவலகத்தை சிவசேனா ஆதரவாளர்கள் அடித்து சூறையாடிய நிலையில், அவர் மீது மும்பை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்கா அருகே உள்ள புதுச்சேரி பகுதியான ஆலங்குப்பம் பகுதியில் தங்கி இருந்த குணால் காம்ரா தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் முடிவில், கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் குணால் காம்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. இதனிடையே, இன்று வானூர் நீதிமன்றத்தில் குணால் காம்ரா சரணடைந்தார். அப்போது ஆலங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் தலா பத்தாயிரம் பிணைய பத்திரம் வழங்கியதின் அடிப்படையில் நீதிபதி பிரீத்தி குணால் காம்ராவை விடுவித்து வருகின்ற 7ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டார்.
குணால் காம்ரா ஆஜரான பிறகு என்னென்ன நிபந்தனைகளில் அடிப்படையில் அவருக்கு பினை கிடைக்கும் என்பது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.