scorecardresearch

சொக்கம்புதூரில் நள்ளிரவில் மயானக் கொள்ளை நிகழ்வு: திரளான பக்தர்கள் வழிபாடு

மகா சிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள இடுகாட்டில் மயானக் கொள்ளை நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சொக்கம்புதூரில் நள்ளிரவில் மயானக் கொள்ளை நிகழ்வு: திரளான பக்தர்கள் வழிபாடு

மகா சிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மயான கொள்ளை நிகழ்வு நடைபெற்றது. அதே போல் கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள இடுகாட்டில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்வு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் மயான கொள்ளை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனையொட்டி சுடுக்காட்டில் மண்ணில் மாசாணியம்மன் சிலை செய்து அலங்கரிக்கப்பட்டது. பின்னர் பம்பை, உடுக்கை இசைக்க அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து மயானத்திற்கு வந்த கோவில் பூசாரி மாசாணி அம்மனை சுற்றி ஆக்ரோசமாக நடனமாடி பூஜை செய்தார். தொடர்ந்து மாசாணியம்மனின் இதய பகுதியில் வைக்கப்பட்டிருந்த மனித எலும்பை வாயில் கடித்தபடி எடுத்து நடனமாடினார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூசாரியின் ஆக்ரோச ஆட்டத்தை பார்த்து பக்தர்கள் ஆரவாரத்துடனும் பரவசத்துடனும் மாசாணியம்மனையும் பூசாரியையும் வழிபட்டனர்.

இந்த நிகழ்விற்கு பின்னர் மாசாணியம்மன் சிலையில் இருந்து மண் எடுத்து செல்லப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் நடத்தப்படும் மயான கொள்ளை நிகழ்வில் கலந்து கொண்டு வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என நம்பப்படுகிறது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mahashivratri puja and customs in temples

Best of Express