/indian-express-tamil/media/media_files/2025/01/29/T0ZqHs5mVHhL5QCfYEPV.jpg)
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ஜ.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் துணைத் தலைவராக இருந்த மைத்ரேயன், 1999-ஆம் ஆண்டு தன்னை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக, 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர், தோல்வியை சந்தித்தார்.
எனினும், அ.தி.மு.க சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக மைத்ரேயன் பதவி வகித்து வந்தார். அதன்படி, கடைசியாக 2019-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் அவர் இருந்து வந்தார்.
அதன் பின்னர், அ.தி.மு.க உடைந்ததில் முதலில் ஓ.பி.எஸ் அணியில் மைத்ரேயன் இருந்தார். அடுத்ததாக இ.பி.எஸ் அணிக்கு மாறிய அவர், 2022-ஆம் ஆண்டு திடீரென ஓ.பி.எஸ்-ஐ சந்தித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதையடுத்து, டெல்லி சென்ற மைத்ரேயன் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக் கொண்டார். ஆனால், பா.ஜ.க-வில் இருந்து அவருக்கு எந்த விதமான பதவியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார்.
இந்த சூழலில், மைத்ரேயனை அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவருடன் சேர்த்து முன்னாள் அமைச்சர் வேலுசாமி, முல்லை வேந்தன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.