பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. ஏற்கனவே, சில மாநிலங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துவிட்ட நிலையில், தமிழகத்திலும் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை சட்டப் பேரவையில் ஏற்றுக் கொண்ட முதல்வர் பழனிசாமி, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாநிலத்தில் உள்ள முக்கியமான கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் கட்சிகள் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கட்டிக்காத்து வருகிறது. 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு விண்ணப்பித்தால் கூடுதலாக 1000 மருத்துவ இடங்களை பெற முடியும். நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின்படி 586 மருத்துவ இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுக்கு கூடுதலாக கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது என கூட்டத்தில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 69% இட ஒதுக்கீடு முறையே தமிழகத்தில் தொடர வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். முடிவில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பும். 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.