தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வ சேகரன், அந்தோணி, கிறிஸ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன், மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி மற்றும் சக்தி ஆகிய 12 பேர் மைக்கேல் பாக்யராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் செப்.1ஆம் தேதி மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மாலத்தீவு கடற்படையினர் இவர்களை கைது செய்தாக கூறப்படுகிறது.
மேலும் அவர்களின் விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் மாலத்தீவு கடற்படையினர் இதுதொடர்பாக தருவைக்குளம் கிராமத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
இவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என விசைப்படகு உரிமையாளர் சங்கம் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனிமொழி ட்வீட்
இது குறித்து திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி ட்விட்டரில், “எனது தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட தருவைகுளத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது மாலத்தீவு கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் விரைந்து தலையிட்டு நமது மீனவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“