சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தி.மு.க-வின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது என்று கூறியதற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சனாதனம் ஒழிப்பு என்பது இந்து மத எதிர்ப்பு என்று பா.ஜ.க-வினர் கூறி வருகின்றனர்.
சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், பா.ஜ.க-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உதயநிதியின் சனாதனம் குறித்த கருத்தை ஏற்றுக்கொள்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தக்கூடாது என திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்லார்.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் கருத்து குறித்து, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் எந்த ஒரு செயலிலும் நாம் ஈடுபடக் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில், ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
சனாதனம் குறித்து உதயநிதி பேசியதில் தவறில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சி.பி.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறுகையில், “சனாதனம், மனுநீதி, வர்ணாசிரமம் பெயரில் காலம் காலமாக திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை எதிர்த்து மாநாடு நடத்தப்பட்டது .சனாதனத்துக்கு எதிராக புத்தர், சித்தர்கள், ராமானுஜர், வள்ளலார், நாராயணக்ரூ, வைகுண்ட சாமிகள் போர் செய்துள்ளனர், மக்களை ஜாதிரீதியாக பிரித்து தனித்தனியாக வைத்திருப்பதுதான் சனாதனம் என உதயநிதி பேசியதில் தவறில்லை” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“