/indian-express-tamil/media/media_files/2025/09/25/children-home-2-2025-09-25-14-52-27.jpg)
காப்பகத்தில் ஒரு குழந்தையை அங்கு உள்ள நபர் ஒருவர் பெல்டால் கொடூரமாக தாக்கும் செல்ஃபோன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. தொழில் நகரமாக கோவையில், பல லட்சக் கணக்கான மக்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி தொழில் கூடங்களில் தொழிலாளர்களாகவும், தொழில்களும் செய்து வருகின்றனர். தொழில் துறைகள் ஒருபுறம் வளர்ந்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப பல்வேறு மோசடிகளும் நாளுக்கு, நாள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் பதிவு செய்து, குழந்தைகளுக்கு உணவு, உடைகள் அளிக்க வேண்டும் என்று கோவை மாவட்டம் முழுவதும், தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்கு சென்று நன்கொடைகள் என்ற பெயரில் வசூலில் ஈடுபடுகின்றனர்.
கோவை மாவட்டம், சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டை பாளையம் பகுதியில் கிரேஸ் ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்ற பெயரில் தனியார் காப்பகம் உள்ளது. தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற சுமார் 26 குழந்தைகளை பராமரிப்பதாக கூறப்படுகிறது.
காப்பகத்தில் ஒரு குழந்தையை அங்கு உள்ள நபர் ஒருவர் பெல்டால் கொடூரமாக தாக்கும் செல்ஃபோன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து, கோவை சர்க்கார் சாமகுளம் பகுதியில் தனியார் காப்பகத்தில் குழந்தையை ஒருவர் பெல்ட்டால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர் பவன்குமார், “காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் சட்ட ரீதியாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, காப்பகத்தில் சிறுவன் தாக்கப்பட்டது குறித்து கோவை குழந்தைகள் நல அலுவலர்கள் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். மொத்தம் 4 பேர் கொண்ட ஒரு குழு காப்பத்தில் விசாரணை செய்து வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவன் படிக்கும் கோட்டைப் பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் காப்பகத்தில் சிறுவன் பெல்ட்டால் தாக்கப்பட்ட விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தாய், தந்தையரை இழந்து ஆதரவற்று தவிக்கும் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாகவும் நலமாகவும் அமையும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.