தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையோட்டி, கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்கள் மும்முரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மதுரையில் கோ புதூர் பகுதியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது, மேடைக்கு எம்ஜிஆர் வேடத்தில் வந்த அதிமுக பிரமுகர் ஒருவர், எடப்பாடி பழனிசாமியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். தற்போது இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. எம்ஜிஆர் வேடத்தில் உள்ள நபரை, எப்படி காலில் விழ அனுமதித்தீர்கள் என நிர்வாகிகள் புகைப்படத்தை ஷேர் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அச்சமயத்தில், மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர், அவரை தடுக்க முயற்சிக்கவில்லை என பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், இச்சம்பவத்திற்கு முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆர் அவரை போல் வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழ வைத்தது சரியா? இன்றளவும் அதிமுகவின் அடிநாதமாக விளங்கிக் கொண்டிருப்பவர்.அவரைப் போலவே வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழுவதை கண்டு ரசிப்பது கட்சிக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம்! என தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil