ஆவின் நிறுவனத்திற்கு எதிராக சிலர் வட மாநில நிறுவனத்திடம் பணம் பெற்று பரப்புரை செய்கிறார்கள் என்ற என்னுடைய கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதராத்துடன் கூடியது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல என அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆவின் பாலில் கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ஆவின் பால் பாக்கெட்களில் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதாக ஆய்வக பரிசோதனை அறிக்கை ஒன்றையும் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "இதில் உண்மை தன்மை இல்லை. வட மாநிலங்களில் உள்ள நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, வட மாநில நிறுவனத்திடம் இருந்து கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்துக்கு எதிராக பேசுகின்றனர்" என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்து தான் கையூட்டு பெற்றதற்கான ஆதாரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுவெளியில் வெளியிட வேண்டும். இல்லை எனில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலை தனது X பக்கத்தில், "வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள்.
உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். இல்லை எனில் தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு" என கடுமையான விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் பதிவிட்டுள்ள அமைச்சர், ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அவர் என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.
மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் , பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“