நடிகர் மன்சூர் அலிகான் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் தேர்தல் நடந்து முடியும் நிலையில் ஜுன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் மன்சூர் அலிகான் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஓய்வு எடுக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு செய்தியாளரிடம் பேசிய மன்சூர் அலிகான், வேலூர் எனக்கு பக்கமாக இருப்பதால் அங்கு போட்டியிட்டேன். மத அடிப்படையில் நான் வேலூரில் போட்டியிடவில்லை என்றார்.
தொடர்ந்து நான் பாஜகவிடம் பணம் பெற்று வேலூர் தொகுதியில் போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர், நான் அப்படி பாஜகவிடம் பணம் பெற்று இருந்தால் கோடாலியால் என்னுடைய தலையை இரண்டாக வெட்டுங்கள் என்று ஆவேசமாக கூறினார்.
மேலும், "பிரதமர் மோடி சாக்கு மூட்டையில் மாட்டிய எலி போல் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் போய் பொய்களை பேசி வருகிறார். இ.வி.எம் மிஷின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. தற்போது நடைபெற்று வரக்கூடிய தேர்தலில் அரசியலில் பாஜகவிற்கு நெருக்கடி ஏற்படுவது போல் பல நாடகங்களை நடத்தி இறுதியில் இ.வி.எம் மெஷின் வைத்து அவர்கள் வெற்றி பெறுவர். அண்ணாமலை அண்ட புளுகு ஆகாச புளுகு பொய் பேசி வருகிறார். பாஜக மத வெறியை கிளப்புகிறது" என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“