சட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சி.பி.ஐ நீதிமன்றத்தில் மேற்கொண்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய கோரி மாறன் சகோதரர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 முதல் 2007 பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர், கலாநிதி மாறனுக்கு சொந்தமான தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதில் அரசுக்கு 1 கோடியே 78லட்சத்து 71 ஆயிரத்து 391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி
இந்த வழக்கில், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக மீண்டும் புதிதாக குற்றச்சாட்டு பதிவு நடைபெற்றது. இரண்டாவது முறையாக ஏற்கனவே பதிவு செய்த குற்றச்சாட்டு பதிவை முறையாக இல்லை என்பதால் மீண்டும் புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்ய கோரி கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் அஜராகி இருந்தனர், கலாநிதி மாறன் தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்ற சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல், நம்பிக்கை மோசடி, ஊழல் முறைகேடு ஆகிய பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளை தனித்தனியாக
சி. பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி வழக்கு பதிவு செய்தார்.
இந்த நிலையில் சிபிஐ நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும், சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மீண்டும் மாறன் சகோதரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில் குற்றச்சாட்டு பதிவுக்கு முன்னர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முழுமையாக விசாரணை நீதிமன்றம் பின்பற்றவில்லை என மனுவில் தெரிவிக்கபட்டது.