சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி முக்கிய சாலைகளில் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை முதல் காலை 8 மணி வ்ரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
பிரெஷ் ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது சீசனை ஜனவரி 5-ம் தேதி நடத்துகிறது. இதில் இம்முறை 25,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு ஜனவரி 5-ம் தேதி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவித்திருப்பதாவது: “சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கி.மீ, 32.186 கி.மீ, 21.097 கி.மீ, மற்றும் 10 கி.மீ என பிரெஷ் ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, 05.02.2025 அன்று காலை 4 மணி முதல் அதாவது நேப்பியர் பாலத்திலிருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 42.195 கி.மீ, ஈ.சி.ஆர், நேப்பியர் பாலத்திலிருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 32.186 கி.மீ, எலியட்ஸ் கடறையிலிருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 21.097 கி.மீ, மற்றும் நேப்பியர் பாலத்திலிருந்து சிவானந்தா சாலை வரை 10 கி.மீ வரை நடைபெற உள்ளது. இடு தொடர்பாகசெனனி பெருநகர போக்குவரத்துக் காவல்துறையினரால் அடிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை பின்வருமாறு பொக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சி தொடர்பாக கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
*காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னத்திலிருந்து காந்தி சிலை வரை இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
*அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க பாலம், டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் சாலை, சாந்தோ ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் காந்தி சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.
*போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மேலும், வாகனங்கள் கொடிமரச் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு வாலாஜா பாயிண்ட் அண்ணா சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
*ஆர்.கே. சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர், ஆர்.கே.மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
*LB சாலை x SP சாலை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
*காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.
*பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல் எம்.ஜி சாலை நோக்கி திருப்பி விடப்படும்.
*MTC பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும் பெசன்ட் நகர் அவென்யூ ML பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து வருகின்ற 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி ஜன. 05 அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். மேலும் வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“