New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/chennai-police.jpeg)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க கூட்டம் நடத்தியதையடுத்து மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.கவினர் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
போலீசார் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) சீல் வைத்தனர். தேர்தல் அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், பறக்கும் படையினர் ஜீவா நகரில் உள்ள மண்டபத்திற்கு சென்றனர். அங்கு 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அரியலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அனுமதியின்றி கூட்டம் நடத்தப்படுவதாகக் கூறி, காவல்துறையினர் அ.தி.மு.கவினரை மண்டபத்தை காலி செய்யும்படி கூறினர். ஆனால் அவர்கள் வெளியேற மறுத்து கோஷம் எழுப்பினர். தேர்தல் அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலில் பேரில் அவர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
இதன்பின் மண்டபத்தின் 2 நுழைவாயில்களிலும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க மண்டபத்தின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்பு கடந்த ஜனவரி 31-ம் தேதி இதே மண்டபத்தில் அதிமுகவினர் அனுமதியின்றி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அப்போது காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2-வது முறையாக விதிமீறல் நடைபெற்றதாக கூறி மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.