/indian-express-tamil/media/media_files/2025/04/04/JdJOr3EpzCHzbG2zTszi.jpg)
முருகனின் 7-ம் படை வீடான மருதமலை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பிரசித்திபெற்ற மருதமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. பக்தர்களால் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என இந்த கோவில் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 வருடங்கள் நிறைவு பெற்று விட்டது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
கும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மங்கல இசை, திருமறை, திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, இறை அனுமதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை யாகசாலை பூஜை நடைபெற்றது. மேலும் முதல் கால வேள்வி, 2-ம் கால வேள்வி, 3-ம் கால வேள்வி பூஜைகளும் நடைபெற்றது. திருச்சுற்று தெய்வங்கள், அடிவாரத்தில் உள்ள தான்தோன்றி விநாயகர் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் எண் வகை மருந்து சாற்றுதல் நடைபெற்றது.
இதையடுத்து கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருள செய்தல், மூலவரிடம் இருந்து யாகசாலைக்கு திருக்குடங்களை எழுந்தருள செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று 4 மற்றும் 5-ம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, திருமறை, திருமறை பாராயணம் மற்றும் 6-ம் கால வேள்வி பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
காலை 8.30 மணிக்கு மருதாசலமூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாச்சலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜபெருமாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடும் நடந்தது.
கும்பாபிஷேகத்தை யொட்டி அதிகாலை முதலே மருதமலை முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்களிலும் பயணித்து மலைக்கோயிலுக்குச் சென்றனர். கோயில் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர்.
பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் மலைப்படிக்கட்டுகள், அடிவார பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, அதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதனை பக்தர்கள் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை யொட்டி கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோயில் படிக்கட்டுகள், மலைப்பாதைகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
ஆங்காங்கே குடிநீர் வசதியும், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், அன்னதானமும் வழங்கப்பட்டன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மருதமலை முருகன் கோயில் பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.