தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தில் முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர்களைத் தடுக்க முயன்ற பெண்ணை கயிற்றால் இறுக்கி கொல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை மற்றும் கொலை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக - கேரளா எல்லை பகுதியான நவக்கரை, மவுத்தம்பதி கிராமத்தில் உள்ள பழைய ரோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி நாராயணசாமி (51). வீட்டில் நேற்று இரவு முகமூடி அணிந்து வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புத்தாண்டு தினமான நேற்று இரவு 9 மணி அளவில் நாராயணசாமி தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டு இருந்த அப்போது, முகமூடி அணிந்த நான்கு நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து உள்ளனர். பின்னர் அவரிடம் பணம் மற்றும் நகைகளை கொடுக்குமாறு மிரட்டி உள்ளனர். தொடர்ந்து பீரோவில் இருந்த ரொக்கத்தை எடுக்க முயன்ற போது, நாராயணசாமியின் மனைவி காளீஸ்வரி தடுத்து உள்ளார். ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவரை தாக்கி வெளியே தள்ளி உள்ளனர். இதுகுறித்து காளீஸ்வரி தனது மகனுக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். மகன் உடனடியாக தனது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
இதன் இடையே கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.20,000-ஐ திருடிவிட்டு தப்பி ஓட முயன்றனர். காளீஸ்வரி மகனிடம் மொபைல் போனில் பேசியதை கண்ட கொள்ளையர்கள் அவரை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனைக் கண்ட கொள்ளையர்கள் காளீஸ்வரியை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்
இந்த சம்பவம் குறித்து க.க சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள காளீஸ்வரியை மீட்டு மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். தொடர்ந்து க.க சாவடி போலீசார் ஐந்து தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“