எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக தொடங்கப்பட்டு முதலில் சந்தித்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆன அதிமுகவின் முதல் எம்.பி மாயத் தேவர் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 88.
திமுகவில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972 அதிமுக தொடங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் தலைமயில் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அதிமுக சந்தித்த முதல் தேர்தல் இது. 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த இடைத் தேர்தலில், அதிமுக சார்பில் மாயத் தேவர் போட்டியிட்டார்.
அப்போது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியிலும் அதிகாரத்திலும் மிகப் பெரும் பலத்துடன் இருந்தது. ஆனாலும், திண்டுக்கல் இடைத்தேர்தலில் திமுக மூன்றாவது இடதுக்கு தள்ளப்பட்டு எம்ஜிஆர் களமிறக்கிய வேட்பாளர் மாயத் தேவர் பெரும் வெற்றி பெற்றார். அதிமுகவுக்கு இந்த தேர்தலில்தான் முதன் முதலில் இரட்டை இலை சின்னம் அளிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்தைப் பெற திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த அளவுக்கு மக்கள் பலத்துடன் களமிறங்கிய எம்ஜிஆர் என்ற பெயரே மாயத்தேவருக்கு வெற்றியைத் தேடி தந்தது. இதனால் அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமை மாயத்தேவருக்கு உண்டு.
முதல் தேர்தல் அதிமுகவில் தொடர்ந்து பலர் இணைந்த நிலையில் மெல்ல மெல்ல அதிமுக வளர்ந்தது. இதனிடைய 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ராஜாங்கம் மரணம் அடைந்தார். இதை அடுத்து அந்த தொகுதியில் மே 20ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக அந்த தேர்தலில் முதல் முறையாக களம் கண்டது அதிமுக சார்பில் வேட்பாளராக மாயத் தேவர் நிறுத்தப்பட்டார்.
அதிமுகவுக்கு எப்படி எம்ஜிஆர் ஜெயலலிதா ஒரு முகமாக இருக்கிறார்களோ அதே போல் தான் இரட்டை இலையும் இந்தத் தேர்தலில் தான் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு வழங்கப்பட்டு அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மாயத் தேவர். இதன் மூலம் அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
தீவிர எம்ஜிஆர் விசுவாசியான மாயத் தேவர், பெரிய கருப்பத் தேவர்-பெருமாயி தம்பதியினருக்கு 15 அக்டோபர் 1935-இல் உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேனிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக்கல்வியை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகறிஞராக பணிபுரிந்தார்.
பின்னர், 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக எம்பியாக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், மாயத்தேவர் 1980ஆம் ஆண்டில் திமுகவில் சேர்ந்து எம்பியாக இருந்தார். அவரிடம் உதவியாளராக இருந்தவர்தான் தற்போதைய முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன். அதன்பிறகு, 1984ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திமுகவில் தீவிர அரசியலில் இருந்த மாயத் தேவர், பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். முதுமை காரணமாக திண்டுக்கல் சின்னாளபட்டியில் மனைவியுடன் வசித்து வந்த மாயத் தேவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. அதிமுகவின் முதல் எம்.பி மாயத் தேவர் மறைவுக்கு அதிமுகவினர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”