சம்பா ரவை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மயில் மார்க் சம்பா ரவை நிறுவனம் தொடர்பாக போலியான தகவல்களை, ரவிகாந்த் என்பவர் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக, அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர்களான பொன்முருகன், பாலசுப்பிரமணியம் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, "முகம் தெரியாத ஒரு நபர் எங்கள் நிறுவனம் மீது சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருகிறார். மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்பி வருகிறார். அதனை மக்கள் நம்பி விடக்கூடாது என்பதற்காக உரிய ஆதாரங்களை மாநகர காவல் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை உணவில் பயன்படுத்தியிருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்கள் இல்லாமல் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
மக்கள் இதனை நம்ப வேண்டாம். இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் உணவு தரமானது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது" என அவர்கள் தெரிவித்தனர்.
செய்தி - பி.ரஹ்மான்