/indian-express-tamil/media/media_files/2025/09/16/whatsapp-image-2025-09-16-17-13-59.jpeg)
Mayiladuthurai Adiyamangalam honor killing
மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலம் கிராமத்தில் நடந்த ஆணவக் கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்பவர், தான் காதலித்த பெண்ணின் சகோதரர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அடியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குமார் - ராஜலட்சுமி தம்பதியரின் மகன் வைரமுத்து (26), அதே பகுதியைச் சேர்ந்த மாலினி (26) என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மாலினியின் தாய் வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், மாலினிக்கு அவரது தாய் மற்றும் சகோதரர்கள் குகன், குணால் ஆகியோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
சமீபத்தில், மாலினி தனது சொந்த ஊரான அடியாமங்கலம் வந்தபோது, அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதை மாலினி மறுத்து, வைரமுத்துவை மட்டுமே திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். இதனால் குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாலினி வைரமுத்துவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, வைரமுத்துவின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளனர். இதைக் கேட்டு சமாதானமடைந்த மாலினி, சென்னைக்குத் திரும்ப முடிவெடுத்துள்ளார். அப்போது, மாலினியின் சகோதரர் குணால், வைரமுத்துவை மிரட்டியதுடன், மாலினியைத் தாக்கியுள்ளார். மாலினியின் தாயும் வைரமுத்து வேலை செய்யும் இடத்திற்குச் சென்று அவரைத் திட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையின்போது, மாலினி தனது காதலில் உறுதியாக இருந்ததோடு, "என் குடும்பத்தினரிடம் என்னை அனுப்பினால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்" என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/16/whatsapp-image-2025-09-16-17-16-24.jpeg)
கடந்த செப். 12 அன்று, போலீசார் மாலினியை வைரமுத்து மற்றும் அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அப்போது, மாலினியின் தாயும், சகோதரர்களும் "இனி எங்களுக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லை" என்று எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு, "நீங்கள் எப்படி உயிரோடு வாழ்கிறீர்கள் என்று பார்க்கிறோம்" என மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், செப். 15 ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில், வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வைரமுத்துவை வழிமறித்த மாலினியின் சகோதரர்கள் குகன், குணால் ஆகியோர் அரிவாள் போன்ற ஆயுதங்களால் அவரை வெட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/16/whatsapp-image-2025-2025-09-16-17-16-40.jpeg)
மாலினியின் தாயின் தூண்டுதலின் பேரிலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது. வைரமுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவராக இருந்துள்ளார். இதனால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/16/whatsapp-image-2025-09-16-17-16-57.jpeg)
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் விசாரணை நடத்தினார். மேலும், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாலினியின் தாயார் வைரமுத்துவை மிரட்டிய வீடியோவின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us