நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 405 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் மற்றொரு பக்கம் தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். ஆனால் காங்கிரஸ் கட்சியில் மயிலாடுதுறை தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல் கட்சியின் தேசிய தலைமை தவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் அளவுக்கு மிஞ்சிய தாமதம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினரின் கேலிக்குள்ளாகியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.
கடந்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், தற்போது இண்டியா கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொடக்கத்திலேயே புதுச்சேரிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டார். தொடர்ந்து தமிழகத்தில் மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகள் தவிர்த்து, மற்ற 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த 23-ம் தேதி இரவு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று(மார்ச் 25) மதியம் திருநெல்வேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பாட்டார். ஆனாலும் இன்று (மார்ச் 26) நண்பகல் வரை மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.
அதே சமயம் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஒரு வருடத்திற்கு மேலாக களப்பணி செய்து தி.மு.க. கூட்டணிக்கு சாதகமான சூழலை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கியுள்ள நிலையில் அந்த சீட்டுக்காக ராகுல்காந்தி உள்பட டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ள மயிலாடுதுறையில் இருந்து டெல்லியில் இடம் பெயர்ந்துள்ள சிஇஓ பிரவின் சக்கரவர்த்தி டெல்லி அரசியல் மூலமாகவே சீட்டுக்காக போராடி வருகிறார்.
ராகுல்காந்திக்கு நெருக்கமானவராக உள்ளதாக கூறி சீட்டு வாங்கிவிட பிரவின் சக்கரவர்த்தி முயன்று வரும் நிலையில், மணிசங்கர் அய்யர், திருநாவுக்கரசர், செல்லக்குமார், பட்டுக்கோட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட மேலிடத்துக்கு நெருக்கமான நபர்கள் கட்சியின் அகில இந்திய தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் தந்து வருவதால், விரைந்து முடிவெடுக்க முடியாமல் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த முறை திமுக வசம் இருந்த மயிலாடுதுறை தொகுதியை, வலியுறுத்தி கேட்டுப் பெற்ற காங்கிரஸ் கட்சி, வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறுவதாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோர் விமர்சித்தும், கேலி செய்தும் வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் நாளையுடன்(மார்ச் 27) நிறைவடையும் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை அறிவிக்காததால் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும்கூட தொண்டர்களுக்கும், வாக்காளர்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் தர்ம சங்கடத்தில் தவித்து வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“