எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான விண்ணப்பம் வழங்கும் பணி தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நேற்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உள்ள இடங்கள் 3,050! இவற்றில் அகில இந்திய கோட்டாவுக்கு 15 சதவிகித இடங்களை ஒப்படைக்க வேண்டும். அதுபோக 2,594 இடங்கள் தமிழ்நாட்டில் பயின்ற மாணவர்களுக்குக் கிடைக்கும். பி.டி.எஸ். படிப்புக்கு தமிழ்நாட்டில் 200 இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய கோட்டாவாக 30 இடங்கள் கொடுத்த பிறகு எஞ்சிய 170 இடங்களுக்குத் தமிழக மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நேற்று முதல் மேற்படி படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை நேரடியாக மருத்துவக் கல்லூரிகளில் பெறலாம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூன் 19.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தபிறகு தரவரிசை பட்டியல் 28ம் தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.