/indian-express-tamil/media/media_files/2025/05/28/mAg99sad4BHDAzRBOGzD.jpg)
தமிழ்நாட்டில் ஜூன் 19-ஆம் தேதியன்று ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தி.மு.க வேட்பாளர்களான பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகிய மூன்று பேரும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ஆகிய அனைவரும் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வில்சன் ஏற்கனவே கடந்த முறையும் மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க சார்பில் பதவி வகித்தவர். அண்மையில், தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வில்சன் வாதாடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம். அப்துல்லா ஆகியோருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதேபோல், கூட்டணி கட்சியான ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிற்கும் இம்முறை மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் வழங்கப்படவில்லை.
வைகோவிற்கு பதிலாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் பாரம்பரியம் கொண்ட வைகோவிற்கு மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பு வழங்கப்படாமல், புதிதாக கட்சி தொடங்கி கூட்டணியில் இணைந்த கமல்ஹாசனுக்கு இந்த இடம் கொடுக்கப்பட்டதாக ஒரு தரப்பினர் கருத்து கூறுகின்றனர். அதேவேளையில், புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் சிலர் தங்கள் கருத்தை பதிவு செய்கின்றனர்.
இந்த சூழலை புரிந்து கொள்வதற்கு கடந்த கால அரசியல் பக்கங்களை புரட்டிப் பார்க்க வேண்டியது அவசியம் ஆகும். தமிழக அரசியல் களத்தில் வைகோவிற்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. தி.மு.க-வின் மேடைகளில் உணர்ச்சிகரமாக பேசியது, ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை காண்பதற்காக இலங்கை சென்றது, பல சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து சிறை தண்டனை அனுபவித்தது என்று வைகோவின் பெயருக்கு பின்னால் பெரும் வரலாறு இருக்கிறது.
இது தவிர வைகோவிற்கும், நாடாளுமன்றத்திற்கும் இடையே ஒரு நீண்ட பயணம் இருக்கிறது. அந்த வகையில், 1978-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை என தொடர்ந்து தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினராக செயலாற்றியவர் வைகோ. இதையடுத்து, 1998-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராக பணியாற்றிய அனுபவமும் வைகோவிற்கு உள்ளது.
இதனடிப்படையில் பார்க்கும் போது எத்தனையோ பிரதமர்களுக்கு முன்னிலையில் வைகோவின் குரல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓங்கி ஒலித்துள்ளது. இதன் பின்னர், 2019-ஆம் ஆண்டில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ம.தி.மு.க அங்கம் வகித்ததால், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை வைகோ பெற்றார்.
இப்படி வைகோ ஆற்றிய அரசியல் பணிகள் ஏராளம். எனினும், இந்த முறை வைகோவிற்கு வாய்ப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருந்தது என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதற்கு ஏற்றார் போல், இன்றைய தினம் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் அமைந்துள்ளது. இதனால், ம.தி.மு.க மூத்த நிர்வாகிகள் தொடங்கி அக்கட்சியின் தொண்டர்கள் வரை அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
குறிப்பாக, வைகோவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை விட கமல்ஹாசனுக்கு அந்த இடம் வழங்கப்பட்டது சில விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில், தி.மு.க-வுடன் எத்தனையோ முறை முரண்பட்டிருந்தாலும், அக்கட்சிக்காக வைகோவின் உழைப்பு இன்றியமையாதது. தனது மாணவர் பருவத்தில் இருந்து தி.மு.க-விற்காக உழைத்த வரலாறு வைகோவிற்கு உள்ளது.
மறுபுறம், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதில் இருந்து தி.மு.க-விற்கு எதிரான நிலைப்பட்டை பல்வேறு சூழல்களில் கமல்ஹாசன் வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக, வாரிசு அரசியல், ஊழல் என்று ஏராளமான குற்றச்சாட்டுகளை தி.மு.க மீது அவர் முன்வைத்தார். அண்மையில் கட்சி தொடங்கிய விஜய் இப்போது தி.மு.க-விற்கு எதிராக என்ன அரசியல் செய்கிறாரோ, அதே பாணியை தான் கமல்ஹாசனும் தாம் கட்சி தொடங்கிய போது செய்தார்.
ஆனால், அதன் பின்னர் கடந்த மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்த போதே மக்கள் நீதி மய்யத்திற்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது பேசுபொருளானது. இதனால், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதையும் கடந்து, அந்த வாய்ப்பு கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளதை பலரும் விமர்சனம் செய்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.