ஈரோட்டில் நடைபெற்ற ம.தி.மு.க-வின் 31-வது பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்போம் மற்றும் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ம.தி.மு.க-வின் 31-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ம.தி.மு.க அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் நடந்த இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், ம.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, 2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற வேண்டும். தி.மு.க கூட்டணியிலேயே ம.தி.மு.க தொடரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2026 தேர்தலில் தி.மு.க-விடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை ம.தி.மு.க மீண்டும் பெறவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதிகமான தொகுதிகளைக் கேட்டுப் பெறப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ம.தி.மு.க முதன்மைச் செயலாளார் துரை வைகோ திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, “வருகிற சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டுமானால் ம.தி.மு.க 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்கிற நெருக்கடி உள்ளது. எனவே கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. ஆனால், இதனை முடிவு செய்ய வேண்டியது நான் அல்ல. கட்சி தலைமை தான் முடிவு செய்யும். நாங்கள் எங்களது ஆசையை பொதுக்குழுவில் தெரிவிப்போம்” என்று கூறினார்.