/tamil-ie/media/media_files/uploads/2021/01/vaico-son.jpg)
இந்தியாவில் ஆதிகாலத்தில் மன்னர் ஆட்சி நடைபெற்று வந்தது. அதன்பிறகு ஆங்கிலேயார் இந்தியாவை கைப்பற்றினாலும், மன்னர் என்ற வழக்கத்தில் அவரது குடும்பத்தினர் மட்டுமே பதவியில் இருந்து வந்தனர். இந்த வழிமுறை காலங்காலமாக தொடர்ந்து வந்த நிலையில், விடுதலைக்கு பின் இந்தியாவில் கிளைகளாக இருந்த அனைத்து பகுதிகளும் இணைத்து இந்தியா என்ற ஒரே நாடு உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்ட இந்தியாவில், முதல்முதலாக காங்கரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.
அப்போதிருந்தே இந்தியாவில் வாரிசு அரசியல் தலைதூக்க தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருக்கு பிறகு அவரது மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜீவ் காந்தி என காங்கிரஸ் கட்சியின் அடுத்தடுத்து பிரதமராக பதவியில் இருந்துள்ளனர். ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக பதவி வகித்தாலும், கட்சியில், ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரின் ஆதிக்கமே தொடர்ந்து வருகிறது.
தேசிய கட்சியில் இவ்வாறு இருக்கும் நிலையில், மாநில கட்சியான திமுகவில், வாரிசு அரசியல் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. 1969-ம் ஆண்டு திமுக தலைவர் பதவியை கைப்பற்றிய திரு. மு.கருணாநிதி அவர் 2019-ம் ஆண்டு இறக்குவரை திமுகவின் தலைவர் பதவியில் இருந்தார். தொடர்ந்து தற்போது அவரது தலைவர் பதவி அவரது மக்கள் மு.க ஸ்டாலின் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்த தலைவருக்கான பயிற்சியில் உள்ள அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உள்ளார். ஏற்கனவே இந்த பதவியில் தற்போதைய தலைவர் ஸ்டாலின் இருந்தார்.
மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில், வேலூர் தொகுதியில் திமுக பொது செயலாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், விழுப்புரம் தொகுதியில் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு ஈடுகொடுக்கும் விதமாக அதிமுக கட்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரகுமார் ஆகியோருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்களது தந்தைக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப இப்போதே பயிற்சியில் உள்ளனர்.
இந்நிலையில், 1964 முதல் திமுகவில் அங்கம் வகித்து வந்த வைகோ 1992-ம் ஆண்டு வாரிசு அரசியலை காரணம் காட்டி அக்கட்சியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர் திமுகவுடன் பல தேர்தல்களில் கைகோர்த்து நின்றுள்ளார். இதில் சில வெற்றிகளையும் பெற்றுள்ளார். இதில் 2 முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், 3 முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வாரிசு அரசியல் தலைதூக்கி வரும் நிலையில், மதிமுகவில் வைகோ தனது வாரிசை இதுவரை களமிறக்கவில்லை. ஆனால் வைகோ போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அவரது மகன் துரை வையாபுரி பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் பத்திரிக்கை மற்றும் டிவியில் அதிகம் பிரபலம் இல்லாத துரை வையாபுரி, கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் இருந்த பாஜக, தேமுதிக, கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடபட்டார்.
மேலும் மதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக உள்ள இவர், அக்கட்சியின் இணையதள பிரிவில் முக்கிய அங்கமாக செயல்பட்டு வருகிறார். மேலும் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு பட்டாசு தொடர்பாக கொண்டு வந்த புதிய சட்டத்தை எதிர்த்து சிவகாசியில் ஊர்வலத்தை நடத்தினார். அடுத்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மதிமுக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனாலும் இதுவரை செய்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஆனால் தற்போது இலங்கையில் சுட்டுகொல்லப்பட்ட 4 மீனவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற ராமநாதபுரம் செல்வதற்காக மதுரை வந்த துரை வையாபுரி திடீரென செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றம் உள்ளது. இதனால் கட்டாயம் ஆட்சி மாற்றம் நிகழும் என்று தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அவர், இந்த வேளாண் சட்டங்களின் பின்னணியில், கார்ப்பரேட் கம்பெனிகள் செயல்படுவதாக விவசாயிகள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு இந்த சட்டம் தெளிவுபடுத்துவது மத்திஅரசின் கடமை என்று கூறியுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக அதிகமாக செய்தியாளர்களை சந்திக்காத துரை வையாபுரி, தற்போது திடீரென செய்தியாளர்களை சந்தித்தது அவரது அரசியல் வருகைக்கு ஒரு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாரிசு அரசியலை அடியோடு வெறுத்த வைகோ தற்போது தனது மகனை அரசியல் களத்தில் இறக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது 76-வயதாகும் வைகோ முன்பு போல் இயங்க முடியாததால் தனது மகனை தயார் படுத்துகிறாரா அல்லது கொரோனா காலத்தில் வைகோ வெளியில் செல்வது சற்று சிரமம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளாரா என்பது பெரும் கேள்விக்குறியாகியள்ளது.
எப்படி இருந்தாலும் மற்ற கட்சிகளை போல வைகோவும் வாரிசு அரசியலில் இறங்கியுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மையான உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.