ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தினால் சோவியத் யூனியனில் நடந்தது போல நரேந்திர மோடி காலத்தில் நடக்கும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ம.தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினராக பொள்ளாச்சி நல்லாம்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாச்சிமுத்து பதவி வகித்து வருகிறார். இவரது மகன் திருமண விழா பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சீர்திருத்த முறையில் ஏற்பாடு செய்யபட்டிருந்த திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ கூறியதாவது, ”இந்திய நாட்டு அரசியலில், சுதந்திர இந்தியாவில் மீண்டும் இருள் சோர்ந்து நெருக்கடி நிறைந்த சூழல் உருவாக்கி இருக்கிறது. இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை வகுத்து தந்தவர் அண்ணல் அம்பேத்கர். ஆனால் அந்த அரசியல் சட்டத்தை சிதைத்து, இந்துத்துவாவின் மனு தர்ம சட்டத்தை நம்முடைய சட்டமாக மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கம் பிரதமர் மோடிக்கு இருக்கிறது. அதன் விளைவாகத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை அறிவித்துள்ளார்.
ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இரண்டு ஆண்டுகளிலே கவிழ்ந்து போனால் அப்போது மீண்டும் எல்லா மாநிலங்களுக்கும் சேர்ந்து தேர்தல் நடத்துவாரா? மேலும் ஒரு சில மாநிலங்களில் அரசு கவிழ்ந்தால் அனைத்து மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்துவாரா?
இந்திய அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்கவும், கூட்டாட்சி தத்துவத்தின் ஆணிவேரை அறுக்கவும் இந்தியாவின் ஒருமைபாட்டிற்கு எவையெல்லாம் தீங்கு விளைவிக்குமோ.. அந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஒவ்வொரு தேசிய இனத்திலும் பலர் இருக்கிறார்கள். தேசிய இனங்களை எல்லாம் ஒன்று சோத்து ஒரு நாடாக ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார்கள். இதில் ஒரு மொழி, ஒரு மதம், கலாச்சாரம், ஒரே தேர்தல் என்று சொல்வதன் மூலம் சோவியத் யூனியனில் என்ன நடந்ததோ அது நரேந்திர மோடி காலத்தில் நடக்கும். இந்தியா துண்டு துண்டாகும். இந்திய அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தால் இந்தியா சிதறுண்டு போகும்.
கேரளா வைக்கத்தில் பெரியாருக்கு மணி மண்டம் கட்டி அதை முதல்வர் திறந்து வைத்து, கேரளா முதல்வருடன் நல்லுறவை ஏற்படுத்தியுள்ளார். இந்த சூழலில் தமிழ்நாட்டில் கூட்டணிகளை பற்றி விவாதங்கள் வருகின்றன. இந்தியா கூட்டணியில் தி.மு.க உள்ளது. தமிழகத்தில் தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என வெற்றி பெற்றதோ, சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும்.
இல்லை, நாங்கள் வருவோம் என சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் பேசலாம். ஆனால் மக்கள் தி.மு.க பக்கம் உள்ளார்கள் மத்திய அரசிடம் 3500 கோடிக்கு மேல் 5000 கோடி நிவாரணம் கேட்டோம். வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அகதிகளாக நிற்கிறார்கள். ஆனால் கேட்டதில் நான்கில் ஒரு பங்கு கூட தரவில்லை. இந்த ஓர வஞ்சகம், பாகுபாடு மத்திய அரசிடம் உள்ளதை மக்களிடம் தெளிவு படுத்த வேண்டும். சோதனையான கால கட்டத்தில் தமிழத்தின் நம்பிக்கை தி.மு.க.,விற்கு பக்கபலமாக கூட்டணி கட்சிகள் இருகின்றன் மக்களும் இருக்கின்றார்கள். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.