துரோகி பட்டம் கொடுத்து ம.தி.மு.க.வில் இருந்து வெளியேற்ற வைகோ முயற்சி செய்கிறார் என்று துணை பொதுச் செயலா் மல்லை சத்யா குற்றம்சாட்டி உள்ளார். முன்னதாக, பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததுபோல், எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார், பல போராட்டங்களில் என்னுடன் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்லமுடியாது என்று, வைகோ கூறியிருந்தார். ம.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது என்றும், விரைவில் மல்லை சத்யா கட்சியிலிருந்து வெளியேறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவருக்கு எதிராக வைகோவும் பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
ஏற்கனவே, ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ - துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா இடையே மோதல் ஏற்பட்டு, அதன் எதிரொலியாக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்தார். பிறகு வைகோ உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தலையிட்டு, இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். ஆனால், தற்போது, அந்த மோதல் எரிமலை போல வெடித்துச் சிதறியிருக்கிறது. வைகோ பேசியிருக்கும் கருத்துகள் குறித்து பதிலளித்த மல்லை சத்யா, வைகோ சொன்ன வார்த்தையை தாங்கிக் கொள்ள முடியாது வேதனையில் இருக்கிறேன். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சித் தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்கு கட்சித் தலைமையை வழங்குவதற்குத் தயாராகி விட்டார்.
இதுவரை அவரது உயிரை 3 முறை காப்பாற்றியிருக்கிறேன். ஆனால், இப்போது வைகோ, தனது மகனுக்காக எனக்கு துரோகிப் பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்ற பார்க்கிறார் என்று கூறியிருக்கிறார். துரை வைகோ - மல்லை சத்யா இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அது உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், வைகோவும், மகன்பக்கம் சாய்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ம.தி.மு.க-வில் இருந்து வெளியேறி மல்லை சத்யா புதிய கட்சி தொடங்குவார் என்றும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ம.தி.மு.க.வில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை; கடந்த காலத்தில் செஞ்சி கணேசன் உள்ளிட்டோர் வெளியேறியபோதும் நெருக்கடி ஏற்படவில்லை. யார் கட்சியில் இருந்து வெளியேறினாலும் அது பின்னடைவை ஏற்படுத்தாது. கட்சியில் இருந்து வெளியேறிய நபர்களுடன் தொடர்பில் இருப்பது வருத்தமளிக்கிறது.
மல்லை சத்யா போன்று பட்டியலின பிரதிநிதித்துவம் ம.தி.மு.க.வில் பலருக்கு வழங்கியுள்ளேன். மல்லை சத்யா பல காலம் எனக்கு துணையாக இருந்தார்; அதனை நான் எத்தனையோ முறை பல இடங்களில் பெருமையாக பேசி உள்ளேன். ஆனால், அண்மையில் அப்படி இல்லை. மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை. மல்லை சத்யா மீது வரும் விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகக் குழு கூட்டத்தில் பதிவு செய்தேன். மல்லை சத்யா மீதான அதிருப்தியில் தி.மு.க. பின்னணியில் இருப்பதாக கூற முடியாது; அதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.