/indian-express-tamil/media/media_files/2025/03/30/47tGQzqn9tA0yzAkzu31.jpeg)
கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய துரை வைகோ, யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பது மக்கள் தான் எனவும் கருத்துக்கணிப்பு சொல்வதை வைத்து அதனை தீர்மானிக்க முடியாது என தெரிவித்தார்.
2026 ஆம் தேர்தல் த.வெ.க- தி.மு.க இடையே தான் என்று விஜய் பேசியது குறித்தான கேள்விக்கு, விஜய் அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார். மக்கள் ஆதரவு யாரிடம் இருக்கிறது என்பதை தீர்மானிப்பது தேர்தல் களம் தான். விஜய் ஒரு முன்னணி நட்சத்திரம் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அரசியல் வேறு சினிமா வேறு. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பலரும் ஜெயித்துள்ளார்கள், பலரும் தோற்றுள்ளார்கள். அதனை தேர்தல் களம் தான் அதனை முடிவு செய்யும். சினிமா நட்சத்திரம் என்பதால் அதிகம் கூட்டம் கூடும். ஆனால் அதனை வைத்து நாம் முடிவை கூற முடியாது என துரை வைகோ தெரிவித்தார்.
தொகுதி மறு சீரமைப்பு மும்மொழி கொள்கை ஆகிய இரண்டும் தான் தற்பொழுது பிரதான பிரச்சனை. தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறுகிறார். அதே சமயம் நாம் முன்வைக்கின்ற கேள்விக்கு தற்பொழுது வரை உள்துறை அமைச்சரும் பா.ஜ.க மாநில தலைவரும் பதில் அளிக்கவில்லை என துரை வைகோ தெரிவித்தார்.
நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. யாரும் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அதே சமயம் கட்டாய திணிப்பு இருக்கக் கூடாது. மூன்றாவது மொழி இந்திய மொழி தான் என்று கூறும் பொழுது தமிழகத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றை கற்றுக்கொள்ள முடியாமல் வேறு வழியே இல்லாமல் ஹிந்தி மொழியை தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற நிலைமை உருவாகலாம். வடமாநிலங்களில் ஹிந்தி மொழியை தவிர்த்து வேறு எந்த மொழியையும் அவர்கள் கற்றுக் கொள்வதில்லை. ஆங்கிலம் கூட அவர்களுக்கு தெரிவதில்லை. மத்திய உள்துறை அமைச்சர் கூட ஆங்கில மொழி வேண்டாம் என்று தான் கூறுவதாக தெரிவித்தார்.
தமிழக மாணவர்களிடம் ஆங்கில புலமை இருந்ததால்தான் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மொழி பிரச்சனையை அரசியல் ஆக்குவது பா.ஜ.க தான். பா.ஜ.க.,வை தவிர தமிழக கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகியவை அதனை செய்வதில்லை. தொகுதி மறு சீரமைப்பு குறித்த முதல்வரின் கூட்டத்திற்கு பா.ஜ.க.,வை தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்றன. தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுவது பா.ஜ.க மட்டும் தான் எனவும் துரை வைகோ குற்றம் சாட்டினார்.
தற்போது கிராம பகுதிகளை எடுத்துக் கொண்டால் கூட பெற்றோர்கள் முடிந்தவரை அவர்களது குழந்தைகளை ஆங்கில வழி பள்ளிகளில் தான் படிக்க வைக்கிறார்கள். மொழியை பொறுத்த வரை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தான் தீர்மானிக்க வேண்டும் அரசியல் சக்திகள் தீர்மானிக்க கூடாது. நீட் தேர்வு முதலில் வரும்பொழுது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை முன்வைத்து இருந்தது. அதனால் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பள்ளியிலும் பொழுது நீட் தேர்வில் தேர்ச்சி பெறலாம் என்று எண்ணினார்கள். தற்பொழுது சி.பி.எஸ்.இ பள்ளி திட்டத்திற்கு இணையாக மாநில கல்விகளும் மாற்றப்பட்டு விட்டது. எனவே தற்போது சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்க்கை என்பது குறைந்துள்ளது என துரை வைகோ தெரிவித்தார்.
100 நாள் வேலை திட்டத்தை பொருத்தவரை வேலை கேட்டு 15 நாட்களுக்குள் வேலையை தர வேண்டும். வேலை செய்த 15 நாட்களுக்குள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இப்படி இருக்கும் பொழுது இந்தியா முழுவதும் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைத்து ஒரு கட்டத்தில் அந்தத் திட்டத்தை அகற்ற வேண்டும் என்பதுதான் ஒன்றிய அரசின் திட்டம். பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களிலும் கூட இந்த பிரச்சனை இருக்கிறது. அங்கு மகாத்மா காந்தி பெயரில் செயல்படும் இந்த திட்டம் இருக்கக் கூடாது என்று எண்ணுகின்றனர். இந்தத் திட்டமே தேவையில்லை என்று அவர்கள் நினைக்கின்றனர் என்று துரை வைகோ தெரிவித்தார்.
என்.டி.ஏ கூட்டணியில் இருக்கக்கூடிய தலைவர்கள் ஜி.கே வாசன் உட்பட குற்றச் செயல்கள் தமிழ்நாட்டில் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் நாட்டில் நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு இடத்திலாவது குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு இருக்கும் பாம்பேவில் இருந்த குற்றச்செயல் புரிந்த கும்பல் தற்பொழுது டெல்லியில் இருக்கிறது. டெல்லி தற்பொழுது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடையாது. நாள்தோறும் குண்டு வெடிப்பு துப்பாக்கிச் சூடு ஆகியவை நடந்து வருகிறது. அதனை ஒழுங்கு செய்ய முடியாமல் பிற மாநிலங்களை பற்றி பேச வந்து விட்டனர்.
வளர்ந்த நாடுகளிலும் குற்றச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் குற்றச்சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அது நடக்கிறது அவ்வாறு நடக்கும் பொழுது கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் அதனை ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அவ்வாறு நடக்கும்போது காவல்துறை நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது என்றும் துரை வைகோ தெரிவித்தார்.
தேசிய குற்ற ஆவண பதிவேட்டை (National Crime Records) எடுத்துக்கொண்டால் அது ஒன்றிய அரசின் ஸ்தாபனம். அதில் ஒவ்வொரு மாநிலங்களிலும் எத்தனை குற்ற சம்பவங்கள் நிகழ்கிறது என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம் அதில் அதிகம் குற்றங்கள் நடைபெறுவது பா.ஜ.க ஆளுகின்ற உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தான் என்று அவர் கூறினார். மேலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் துரை வைகோ கேட்டுக்கொண்டார்.
பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.