தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ நிபுணர் குழு, தமிழகத்தில் கொரோனா புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை கடுமையாக்க அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நோய் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறிவந்த நிலையில், நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 38 பலியானதாக சுகாதாரத்துறை அறிவித்தது.
இதனிடையே, தமிழக முதல்வர் பழனிசாமி வருகிற ஜூன் 17-ம் தேதி பிரதமர் மோடியுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ள நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, மருத்துவ நிபுணர் குழு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது, மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களிடம் பேசியதாவது: “மருத்துவ நிபுணர் குழு முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருடன் 5வது முறையாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 1 மணி வரை நடைபெற்றது. ஒன்றரை மணிநேரம் முதல்வர் எங்களுடன் கலந்து ஆலோசித்தார். தற்போது இருக்கும் நிலைமையைப் பற்றியும் கொரோனா தொற்று எண்ணிக்கை, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பது குறித்து நாங்கள் அலசி ஆராய்ந்தோம். உலக சுகாதார நிறுவனத்தில் இருக்கக் கூடிய சௌமியா சுவாமிநாதன், டாக்டர் அருண்குமார், பிரதிபா ஆகியோர் காணொலி காட்சி மூலம் பேசினார்கள். நோய் பரவலைத் தடுப்பதற்கான என்னென்ன வழிகளோ அதைப்பற்றி நாங்கள் விவாதித்தோம். நாங்கள் பேசும்போது எந்த ஒரு நோய்த்தொற்றும் ஒரு உச்சத்திற்கு சென்று அதன்பிறகு குறைய ஆரம்பிக்கும் என்று சொல்லியிருக்கிறோம். இப்போது நாம் ஒரு உச்ச நிலைக்கு வந்திருக்கிறோம். அது குறைய ஆரம்பிக்கும் என்பதை நாங்கள் விவரித்தோம். அதே போல, உச்ச நிலைக்கு போகும்ப்போது நாங்கள் அதிகமான பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.
சென்னை மாநகரத்தில் அதிகமான தொற்று வருவதால் அங்கே பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். அதே போன்று, தமிழ்நாடு முழுவதும் 75,000 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 5000 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் உள்பட 12,500 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செவிலியர்கள் அதிகப்படியாக 2000 பேர்களை நியமித்திருக்கிறார்கள். மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்ததால் இந்த நோய்க்கு தீவிர சிகிச்சை பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மத்தியில்தான் இறப்பு கூடும் என்பதால் ஃபோக்கஸ் பரிசோதனை செய்து அவர்களுக்கான சிகிச்சையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
சென்னையைப் பொறுத்தவரை இந்த நோயின் நிலைமையைப் பற்றி ஒவ்வொரு வார்டு வாரியாக மருத்துவ வசதிகள் என்ன செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி நாங்கள் பார்த்தோம். உதாரணத்திற்கு அறிகுரியுள்ளவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்ட 12,500 மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்களில் பாதி பேர் சென்னையில் பணியமர்த்தப்பட்டிக்கிறார்கள்.
அதே போல, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் பரிசோதனை செய்வதை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.
சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையங்களை பலப்படுத்தி அங்கெல்லாம் ஆக்ஸிஜன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மிதமான தொற்று உள்ளவர்களுக்கு புறநகர் மருத்துவமனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கே ஆக்ஸிஜன் வசதி, படுக்கை வசதிகள் உள்ளன. மக்கள் மருத்துவமனையில் சேர்வதற்கு கடினப்பட வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் நாங்கள் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்கி மக்கள் மத்தியில் நோய் பரவலைத் தடுக்க முடியும் என்பதற்கான ஆலோசனைகளை நாங்கள் பரிந்துரை செய்தோம். அவற்றை அவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலனை செய்து அதற்கான நடவடிகைகளை எடுப்பார்கள்.” என்று கூறினார்கள்.
அப்போது செய்தியாளர்கள், கொரோனா இறப்பில், 25, 40, 50 வயதுகளில் நிறைய பேர் இறந்திருக்கிறார்கள். இந்த இறப்பு வீதத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என்று மருத்துவ நிபுணர் குழுவிடம் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவ நிபுணர் குழு, “கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது எதிர்பார்த்த விஷயம்தான். நோய் தொற்று அதிகரிக்கும்போது இறப்புகளும் அதிகரிக்கும் என்பது முதலிலேயே தெரிந்ததுதான். நாங்கள் கிட்டத்தட்ட 2 மாதமாக அறிவுறுத்தி வருகிறோம்.
இந்த தொற்று சூழலில் நிறைய பேர் உளவியல் ரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு ஆலோசனை வழங்க நடமாடும் மருத்துவமனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிலருக்கு ஒரு நாள் இரண்டு நாள் ஜுரம், தலைவலி, இருமல் இருந்துவிட்டு அடுத்த நாள் சரியாகி விட்டிருக்கலாம். அவர்களுக்கும் கோவிட்டாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால், அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி அறிகுறி உள்ளவர்கள் நிறைய பேர் பயப்படுகிறார்கள். அவர்களைக் கண்டுபிடித்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்று பயப்படுகிறார்கள். அது தவறு. அதனால், யாருக்கு உடல் நிலை சரியில்லையோ அவர்களுக்கு இதயத் துடிப்பு அளவிடும் கருவியை வைத்துவிட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். அது போல உள்ளவர்களை கண்காணித்து ஆக்ஸிஜன் அளவு 94%க்கு கீழே சென்றால் அவர்கள் சீக்கிரமாக மருத்துவமனையில் சேர்வது நல்லது. ஆனால், சிலர் மூச்சுத்திணறல் அதிகமாகும்போது மருத்துவமனைக்கு செல்வது மிகவும் தாமதமானது. அதனால், மக்கள் இதை புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும்.
ஊரடங்கில் எந்த விஷத்தில் கடுமையாக்க வேண்டும், எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது போன்ற ஊரடங்கை கடுமையாக்குவதற்கு ஆலோசனைகளை கொடுத்திருக்கிறோம். அரசு அதனை முடிவு செய்யும்.” என்று கூறினார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"