மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு அணைகள் உள்ள நிலையில், புதிதாக மேகதாது எனும் பகுதியில் அணை கட்ட, முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது.
காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில், 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் இந்த புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது. இந்த அணையின் மூலம், 67 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகாவால் தேக்கி வைக்க முடியும், பெங்களூரு நகரத்தின் குடிநீர் வசதிக்காகவே இது கட்டப்பட முடிவு செய்ததாக கூறப்பட்டது.
ஆனால், மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் நிறைய சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கருதுகிறது. மேகதாது அணையை கட்டியே தீருவது என தற்போதைய குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. அதேசமயம், இதனை கட்டவிடக் கூடாது என்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது.
இதற்கிடையே, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது. அத்துடன் அணை தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி அளித்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அணை தொடர்பான பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.
மேலும், தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது.