திருச்சி, திருநெல்வேலி, சேலம் மாநகராட்சிகளில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான (மெட்ரோ ரயில் சேவை) சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: “திருச்சி, திருநெல்வேலி, சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (Detailed Feasiblity Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான மு.அ. சித்திக், சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் இன்று (31.08.2023) சமர்பித்தார்.
தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் துரித போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதே போல், திருச்சி, திருநெல்வேலி, சேலம் மாநகராட்சிகளிலும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் மற்றும் விரைவாக்கும் வகையிலும் பெருந்திரள் துரிதப்போக்குவரத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சாத்தியக் கூறு ஆய்வின் மூலம் திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கு உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் இந்த சாத்தியக் கூறு அறிக்கையில் கண்டறியப்பட்டன. அதன்படி போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருச்சி
திருச்சி மாநகராட்சியில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்களும் துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 26 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 2 வழித்தடங்களில் 45 கி.மீ நீளத்திற்கு 45 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகராட்சியில் பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 13 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும் பாளையம்கோட்டை முதல் பொன்னாக்குடி வரை 12.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 12 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், சங்கர்நகர் முதல் வசந்தநகர் வரை 14.65 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 3-ல் 15 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள் என மொத்தம் 3 வழித்தடங்களில் 39.07 கி.மீ நீளத்திற்கு 40 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சேலம் மாநகராட்சியில் கரபுரநாதர் கோவில் முதல் அம்மாப்பேட்டை வழியாக அயோத்திப்பட்டணம் ரயில் நிலையம் வரை 17.16 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 2 வழித்தடங்களில் 35.19 கி.மீ நீளத்திற்கு 38 ரயில் நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போதுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அடுத்த 30 ஆண்டு கால மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு இந்த பெருந்திரள் துரித போக்குவரத்து உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான சாத்தியக்கூறு அறிகை மாற்றம் வரலாம்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் அர்ச்சுனன் (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் டி. லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தி உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“