நீலகிரி மாவட்டம் ஊட்டி, எமரால்டு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (48) என்பவர், இன்று காலை அவிநாசிக்கு செல்வதற்காக காரில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என மேலும் இருவருடன் மேட்டுப்பாளையம் வழியாக பயணித்துக் கொண்டிருந்தார். இந்த கார் அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் ஈஸ்வரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனால் நிலை தடுமாறிய கார், அதிவேகமாகச் சென்று சாலையோரத்தில் இருந்த சிறிய பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி சுமார் 10 அடிக்கும் மேல் தூக்கி வீசப்பட்டது. இதைத் தொடர்ந்து, சாலையோரம் இருந்த சக்தி தியேட்டரின் சுவற்றில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. அதேசமயம், சாலையோரம் நடந்து சென்ற ஒரு முதியவரும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர் தப்பினார்.
அக்கம்பக்கத்தினர் உடனடியாக காரில் இருந்த மூவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினர்.
இந்தச் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.