மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 எட்டவுள்ள நிலையில் நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) காலை ஆய்வு செய்தார்.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வந்தது. ஃபீஞ்சல் புயல் காரணமாக, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாகவும், தொப்பையாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் (டிசம்பர் 4) 32,240 கன அடியாகவும், நேற்று (டிசம்பர் 5) 25,098 கன அடியாகவும் இருந்த நிலையில் இன்று (டிசம்பர் 6) 14,404 கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர், கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி என நீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விட, நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 114.58 அடியில் இருந்து 115.32 அடியாகவும், நீர் இருப்பு 85.09 டி.எம்.சி-யில் இருந்து 86.20 டி.எம்.சி-யாகவும் உயர்ந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இருக்கும் பட்சத்தில் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் என்பதால் அணை பகுதிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார், இன்று அணையில் ஆய்வு மேற்கொண்டார். அணையின் 16 கண் மதகு பகுதி, இடது கரை, வலது கரை, வெள்ள கட்டுப்பாட்டு மையம், சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அணை முழு கொள்ளவை எட்டும் போது, நீரை வெளியேற்றுவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், நீர்வளத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது, சேலம் மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன், அணை பிரிவு உதவி பொறியாளர் சதிஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாள குமார் நிருபர்களிடம் கூறியது: காவிரி நீர் தேக்கப் பகுதிகளில் நீர் பச்சை நிறமாக மாறியதற்கு விவசாய பணிகள் மற்றும் அதன் ரசாயன கழிவுகள் தான் காரணம். மேட்டூர் அணை பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை விரைவில் சரி செய்யப்படும். டெல்டா மாவட்டங்களில் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேரில் விவசாய பணிகள் நடந்து வருகிறது.
டெல்டா பாசனத்திற்கு தற்போது 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக நீர் தேவைப்படும் பட்சத்தில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும். அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டினால் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்படும். திருச்சி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 925 ஏரிகளில் 95 சதவீதம் ஏரிகள் நிரம்பி உள்ளனஎனக் கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.