/indian-express-tamil/media/media_files/2025/08/21/mettur-dam-salem-92nd-year-tamil-news-2025-08-21-13-32-09.jpg)
மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அணையில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணை, நாட்டுக்காக அர்பணிக்கப்பட்டு 91 ஆண்டுகள் நிறைவு பெற்று 92-வது ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கிறது.
வரலாறு
கர்நாடகாவின் குடகு மாவட்டம் தலைக் காவிரியில் உருவாகும் காவிரியாறு 20க்கும் மேற்பட்ட துணை ஆறுகளுடன் கலந்து அகன்ற காவிரியாக உருவாகி கர்நாடகா மற்றும் தமிழகத்தில் 748 கிலோ மீட்டர் பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மேட்டூர் அணை கட்டுவதற்கு முன் அடிக்கடி காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டன. அதைத் தடுக்க காவிரி குறுக்கே அணைகட்ட அப்போதைய சென்னை மாகாண ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. தொடர்ந்து அதற்கான ஆய்வு 1834 ஆம் ஆண்டு முதல் 1924ஆம் ஆண்டு வரை வரை 90 ஆண்டுகள் நடந்தன.
கட்டுமானம்
ஆங்கிலேய அரசின் கண்காணிப்பு வடிவமைப்பு பொறியாளர் கர்னல் எல்லீஸ், நிர்வாகப் பொறியாளர் வெங்கட்ராமன் ஐயர், முதன்மை தலைமைப் பொறியாளர் முல்லிங்கி அடங்கிய 24 பொறியாளர்கள் குழுவினருடன் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணை முதலில் திட்டமிடப்பட்டப்போது, தற்போது அணை இருக்கும் இடத்தில் கட்டுவதற்குத் திட்டமிடப்படவில்லை. மாறாக, தற்போதுள்ள இடத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரம் தள்ளி இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால், 1924ஆம் ஆண்டு காவிரியில் மிகப்பெரிய வெள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்போதுதான், முன்பு திட்டமிட்டதைவிடக் கூடுதல் நீரைத் தேக்கும் வகையில் அணை கட்டப்பட வேண்டும் என்பதற்காகத் தற்போதுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு ஏழு கோடியே 37 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீளம் 5300 அடியாகும். அணையின் அதிகபட்ச உயரம் 214 அடியாகும். அதிகபட்ச அகலம் 171 அடியாகும். அணையின் சேமிப்பு உயரம் 120 அடியாகும். மேட்டூர் அணையில் 59.25 சதுர மைல் பரப்பளவில் நீர்தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, வரி வருவாய் உயர்வதன் மூலம், செய்யப்பட்ட முதலீட்டிற்கு 6 சதவீதம் அளவுக்குப் பலன் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், இந்த அணையின் மூலமாக டெல்டா மாவட்டங்களில் உருவாகும் வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம் உயர்ந்தது போன்றவற்றைக் கணக்கிடும்போது இந்த வருவாய் மிகக் குறைவுதான்.
இந்த அணைக்கான செலவைத் திட்டமிடும்போது, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது. கட்டுமானப் பணிக்கான செலவு, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான செலவு, ஊழியர்களின் வீடுகளுக்கான செலவு, கால்வாய்கள், இயந்திரங்கள், ஓய்வூதியம், இவ்வளவு ஏன் வரைபடம் உள்ளிட்ட காகிதங்களுக்கு ஆகும் செலவுகள்கூட துல்லியமாகக் கணக்கிடப்பட்டன.
இந்த அணையைக் கட்ட 2,16,000 டன் சிமென்ட் தேவைப்பட்டது. இந்த அளவுக்கு சிமென்ட் சப்ளை செய்ய ஷகாபாத் சிமென்ட் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சிமென்ட்டை எடுத்துவர, சேலத்தில் இருந்து மேட்டூர் வரை ஒரு ரயில் பாதை போடப்பட்டது.
திட்டப் பணிகளுக்கு சாலைகள் மிக மோசமாக இருந்ததால் செயற்பொறியாளர் T.I.S.மெக்கே (T.I.S.Mackay) ஈரோட்டிலிருந்து அணை வரை 36 மைல்களுக்கு ரயில்பாதை அமைத்துக் கொடுத்தார். அந்த ரயில் பாதைக்கான செலவின் ஒரு பகுதி மேட்டூர் திட்டச் செலவிலிருந்தே அளிக்கப்பட்டது.
மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பாக மேட்டூர் ஒரு குக்கிராமம். ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 37 மைல் தூரத்தில் இருந்தது. அங்கிருந்து மேட்டூரை வந்தடைய மண் சாலைதான் இருந்தது. அணை குறித்த நேரத்தில் கட்டப்பட வேண்டுமென்றால், அணையின் கட்டுமானப் பணிகளுக்காக வரும் தொழிலாளர்கள், பொறியாளர்கள் தங்கும் அளவுக்கு ஒரு சிறிய நகரத்தையாவது மேட்டூரில் உருவாக்க வேண்டியிருந்தது.
இதையடுத்துதான் பொருட்களை எடுத்துவர, சேலத்தில் இருந்து ஒரு ரயில் பாதையும் தார் சாலையும் போடப்பட்டது. பிறகு, அணையின் பணியாளர்களுக்காக வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டது. மொத்தமாக 10,000 பேர் தங்கும் அளவுக்கான வீடுகள் இதற்காகக் கட்டப்பட்டன. ஒரு குக்கிராமம், ஒரு சிறு நகரமாக உருவெடுக்க ஆரம்பித்தது. மேட்டூர் டவுன் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. தூய்மையான குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளுடன் இந்தச் சிறுநகர் உருவாக்கப்பட்டது. மைசூர் அரசுக்கு உட்பட்டிருந்த சிவசமுத்திரத்தில் இருந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இங்கு வசித்த மக்களுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மிகப்பெரிய வாரச் சந்தை கூடியது.
நிலம் எடுக்கும் பணிகளுக்காக, மேட்டூர் தனி மாவட்டம் என அறிவிக்கப்பட்டது. மேட்டூர் அணை அமையும் இடம், அணையின் நீர் தேங்கும் இடம், தொழிலாளர்களின் கேம்ப், மின் நிலையம், ஒர்க் ஷாப் பகுதிகள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால், இந்த அந்தஸ்து நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நில எடுப்புப் பணிகள் முடிந்த பிறகு, 1929 ஜூலையில் மேட்டூர் மாவட்டம், சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக கீழிறக்கப்பட்டது. 9 ஆண்டு காலம் நடந்த இந்த கட்டுமானப் பணியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். சுண்ணாம்பு, காரை மட்டுமின்றி சிமெண்ட்டை கொண்டும் அணை கட்டப்பட்டுள்ளது.
அணை கட்டப்படும் இடத்தில் காவேரிபுரம் என்ற ஊர் ஒன்று இருந்தது. அணை கட்டப்பட்ட தருணத்தில் இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் வசித்து வந்தனர். சிதிலமடைந்த நிலையில் ஒரு கோட்டையும் ஒரு சிவன் கோவிலும் இந்தக் கிராமத்தில் இருந்தன. மைசூருக்கு செல்லும் கணவாயின் துவக்கத்தில் இந்தக் கோட்டை அமைந்திருந்தது. மைசூரிலிருந்து வரும் படையெடுப்பைக் கண்காணிக்க, திருமலை நாயக்கரால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இந்தக் கோட்டை 1768 இல் ஆங்கிலேயர் வசம் வந்தது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஹைதர் அலி அதைக் கைப்பற்றினார். மைசூர் போர் நடந்த காலம் நெடுகவே இந்தக் கோட்டை வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
ஆனால், அணை கட்டப்பட்டுக் கொண்டிருந்த 20ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. முடிவில், இந்தக் கோட்டை ஊரோடு சேர்ந்து மேட்டூர் அணையில் மூழ்கியது. அன்றைய மேட்டூரை சுற்றி இருந்த சோழப்பாடி, நெருஞ்சிப்பேட்டை, சம்பள்ளி, நேயம்பாடி, செட்டிபட்டி, தாளவாடி, பழைய நாயம்பாடி, பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட 33 கிராமங்கள் மேட்டூர் அணையால் நீரில் மூழ்கின.
கி.பி 10ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட நந்தி முகப்பும், ஜலகண்டீஸ்வரர் கோயிலும், ஆங்கிலேயர் காலத்தில் கட்டபப்ட்ட இரட்டை கோபுர கிறிஸ்தவ தேவாலயமும் இதன் அடையாள சின்னங்களாக நீரில் மூழ்கி உள்ளன அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு கீழ் குறைந்தால் நந்தி சிலையும், 70 அடிக்கு கீழ் குறைந்தல் கிறிஸ்தவர் கோபுரமும் இன்றைக்கும் தெரியும்.
சுமார் 9 ஆண்டுகள் இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து, மேட்டூர் அணை கடந்த 1934ஆம் ஆண்டு ஜூலை 14 கடைசியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை கட்டுவதற்கு 4.80 கோடி ரூபாய் செலவானது. இதைத் தொடர்ந்து, 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி அப்போதைய ஆங்கிலேய ஆட்சியில் சென்னை கர்னலாக இருந்த சர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி, அணையை முதன் முறையாக திறந்து வைத்தார். இதன் நினைவாக அணைக்கு ஸ்டேன்லி அணை என பெயர் சூட்டப்பட்டது.
பாசன வசதி
அணைக் கட்டுமானப் பணி முடிந்த நிலையில் இதுவரை 1947, 1999, 2015 ஆண்டுகளில் அணையின் மேற்கு பகுதியில் மின்னல் தாக்கியது, எனினும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படும். இதன் மூலம் சேலம் மட்டுமல்லாது கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் நீர்த்தேக்க வளாகத்திலேயே 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையமும் உள்ளது.
முன்னதாக, மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அணையில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.