மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியாக உயர்ந்துள்ளது. பாசனத்திற்காக நேற்று மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அதன் நீர்மட்டம் உயர்ந்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபிணி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் அதன் முழுக்கொள்ளளவை எட்டின. இதனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று நிலவரப்படிஅணைக்கு 1.14 லட்சம் கன அடி நீர்வரத்து இருந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.
இந்நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு 1,01,277 அடியிலிருந்து 59,594 கன அடியாக குறைந்துள்ளது. நீரின் வரத்து குறைந்தும் நீர் மட்டம் 109 அடியிருந்து 112 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 112.04 அடியாகவும்,நீர் இருப்பு83.33 டி.எம்.சி,யாகவும் உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், மேட்டூரில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போது 209 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அனல்மின் நிலையத்தில் 33 மெகாவட், சுரங்க மின் நிலையத்தில் 180 மெகாவார்ட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.