மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 75 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கேரளா, கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில்ல் கடந்த 2 வாரங்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 60,740 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 73,452 கனஅடியாகவும், மாலையில் 80,984 கனஅடியாகவும் உயர்ந்தது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 80,984 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது. இது குறித்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.39 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது. எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் வினாடிக்கு நீர்வரத்து 50,000 கன அடி முதல் 75,000 கன அடி வரை திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும். உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்