Former Tamil Nadu CM M. G. Ramachandran Birthday Today : எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினார்கள்.
எம்.ஜி.ஆர்-ன் 102-வது பிறந்த நாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முதலமைச்சர் பழனிசாமி எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தையும் இன்று வெளியிடுகிறார்.
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்
அவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சேலத்தில் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஒருங்கிணைந்த சிலைகளை முதல் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலையுடன் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை திறந்து வைத்தபோது பேசிய முதல்வர், “பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் தலைசிறந்து விளங்குவதற்கு எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகிய இருவர் தான் காரணம்” என தெரிவித்தார்.
மேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடிதம் வெளியிட்டுள்ளனர். அதில், “தமிழ் மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம், அதிமுக மட்டும்தான் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் புரட்சித் தலைவரின் புனிதப் பாதையில், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த வெற்றிப்பாதையில் எந்தத் தேர்தல் எப்போது வந்தாலும், விசுவாசத் தொண்டர்களாகிய நாம் வெற்றி வாகை சூட அயராது உழைத்து ஒற்றுமையோடு புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் சபதம் எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.
எம்ஜிஆர்-ன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் அவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் பலரும் எம்ஜிஆர் பிறந்தநாளில் அவரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.