/tamil-ie/media/media_files/uploads/2023/03/MHC.jpg)
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 7 கட்ட வாக்குப் பதிவுக்குப் பின், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்து 45 நாட்களுக்கு மேல் வாக்கு எந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
தேர்தல் அறிவிப்பு அரசியல் சட்ட விதிகளையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளையும் மீறும் வகையில் உள்ளதால், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த உத்தரவிட
வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு என்பது முழுக்க முழுக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
இந்த வழக்கு விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம். தேர்தல் நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்த காலக்கெடுவும் விதிக்கப்படாத நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.