/indian-express-tamil/media/media_files/wBFLSiXh8om7yhUMWkOY.jpg)
பிரபல திரைப்பட பின்னணி பாடகரான மனோ சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு சாகீர் மற்றும் ரபீக் என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 10-ம் தேதி இரவு மனோவின் மகன்கள் இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் மதுபோதையில் நின்று பேசி கொண்டிருந்ததாகவும், வீட்டின் அருகே நடந்து சென்ற சிறுவன் உள்பட 2 பேரை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மனோவின் மகன்கள் மீது வளசரவாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் போில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மனோவின் மகன்களின் நண்பர்களான விக்னேஷ், தர்மா ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மனோவின் மகன்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகர் மனோவின் மகன்களை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பாடகர் மனோவின் மகன்கள் ரபீக், சாகீர் ஆகியோரை 4 மோட்டார்சைக்கிளில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டு கட்டை, கற்களை கொண்டு தாக்கியது பதிவாகி இருந்தது.
மனோவின் மகன்களும் எதிர்தரப்பால் தாக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில், சம்பவம் நடந்த அன்று தன்னையும், தனது மகன்களையும் ஆயுதங்களைக் கொண்டு சிலர் தாக்கியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் தற்போது வளசரவாக்கம் போலீசார் தாக்குதல் நடத்திய 8 பேர் மீது ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.