சமூக நலத்துறையுடன் மேற்கொண்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால், சத்துணவு பணியாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவுப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, கடந்த 2 தினங்களுக்கு முன்பு, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, போராட்டத்தை தொடர்வதாக அவர்கள் அறிவித்தனர்.
சத்துணவு பணியாளர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
இந்நிலையில் சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், பணப் பலன்கள் உள்ளிட்டவை குறித்த நீண்ட அறிக்கையை அரசு வெளியிட்டது. தொடர்ந்து, சமூக நலத்துறை செயலர் மணிவாசன், தலைமையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது. அப்போது, உணவு மானியத் தொகை மற்றும் போக்குவரத்து பயணப்படி வழங்கப்படும் என்று வாய்மொழியாக உறுதியளிக்கப்பட்டது. அத்துடன், இதுதொடர்பாக விரைவில் அரசாணை வெளியிட்டு சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்ககப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு, 9 நாள் தொடர் போராட்டத்தை, தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சத்துணவு பணியாளர்கள் சங்கம் அறிவித்தது. இருந்த போதும், காலமுறை ஊதியம் போன்ற பிரதான கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.