/indian-express-tamil/media/media_files/2025/09/28/milk-association-vijay-karur-stampede-2025-09-28-14-34-28.jpg)
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தினால் ஏழை தொழிலாளர்கள் எண்ணற்றவர்கள் மரணமடைந்த போது உடனடியாக அங்கே சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறாத முதலமைச்சர், தற்போது த.வெ.க விவகாரத்தில் உடனடியாக நேரில் சென்றது அரசியலாகவே தெரிகிறது என பால் முகவர்கள் சங்கம் கூறியுள்ளது.
தனது மக்கள் சந்திப்பின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், செப்டம்பர் 27 அன்று நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். நாமக்கலில் பிற்பகலில் பரப்புரை முடிவடைந்த நிலையில், கரூரில் மாலையில் பரப்புரை செய்தார். கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கரூரில் த.வெ.க கேட்ட இடத்தை அரசு ஒதுக்கீடு செய்யாதது ஏன் என பால் முகவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
“தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கரூர் துரதிஷ்டவசமான நிகழ்வில் பலி எண்ணிக்கை 40ஐ கடந்திருக்கிறது என்கிற தகவல் உள்ளபடியே அதிர்ச்சியளிக்கிறது. நடிகர் விஜய் அவர்களை நேரில் காண வேண்டும் என்கிற ஆர்வமிகுதியால் நெருக்கியடித்துக் கொண்டு சென்று பலியான கரூர் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
கரூரில் நடைபெற்ற இந்த அசம்பாவித சம்பவம் நமக்கு இரண்டு விசயங்களை உணர்த்துவதாக உள்ளது.
1) விக்கிரவாண்டி, மதுரையில் த.வெ.க நடத்திய கட்சியின் முதல் 2 மாநாடுகள், அதன் பிறகு திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களை சந்திக்கும் பரப்புரை கூட்டங்கள் என நடிகர் விஜய் அவர்களுக்காக கூடிய கூட்டங்களை கண்ட பிறகும் த.வெ.க அனுமதி கேட்ட 3 இடங்களில் கரூரில் குறுகிய இடத்தில் அவர் மக்களை சந்திக்க அனுமதி கொடுத்தது காவல்துறை செய்த மிகப்பெரிய தவறு, மேலும் த.வெ.க நிர்வாகிகள் கொடுத்த அனுமதி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையை விட எவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை தோராயமாக கணித்து அதற்கேற்ற வகையில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொள்ளாததும், த.வெ.க நிர்வாகிகளின் கடிதத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதாக காவல்துறை இயக்குநர் கூறியிருப்பதும் தமிழக உளவுத்துறையும், ஆட்சி நிர்வாகமும் செயலிழந்து போயுள்ளதை நன்கு உணர்த்துகிறது.
2) ஏற்கனவே குறிப்பிட்டது போல மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற கட்சி மாநாடு, கூட்டங்களில் கூடிய ரசிகர்கள் கூட்டத்தை விட கரூரில் கூடுதலாக கூட வாய்ப்புள்ளது என்பதை கணித்து குறுகிய இடத்தில் விஜய் அவர்கள் மக்களை சந்திக்க காவல்துறை வழங்கிய அனுமதியை ஏற்காமல் அதிகளவில் கூடும் பகுதியில் மக்களை சந்திக்க நீதிமன்றத்தில் முறையிட்டாவது அனுமதி பெற நடவடிக்கை எடுக்காமல் கட்சி தலைமை இருந்திருப்பதும், தொண்டர்கள் எனும் ரசிகர்களுக்கான பாதுகாப்பு விசயத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்திருப்பதும் முழுக்க, முழுக்க த.வெ.க நிர்வாகிகளிடையே நிர்வாக திறன் இல்லை என்பதை நன்கு உணர முடிகிறது.
மேலும், இதற்கெல்லாம் மேலாக ரசிகர்களை பல மணி நேரம் வெயிலிலும், நெருக்கடியான பகுதியிலும் கால்கடுக்க நிற்க வைத்து விட்டு மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு நடிகர் விஜய் அவர்கள் பல மணி நேரம் காலதாமதமாக அப்பகுதிக்கு வருகை தந்ததும், விஜய் அவர்கள் மிக காலதாமதமாக வருகை தந்ததும் அவரை நேரில் காண வேண்டும் என்கிற ஆர்வத்தில் முண்டியடித்து, அவரை நோக்கி அவரது ரசிகர்கள் நெருக்கியடித்துக் கொண்டு முன்னோக்கி சென்றதும் செப்டம்பர் 27 ஆம் தேதியை தமிழக அரசியல் வரலாற்றில் கறுப்பு தினமாக மாற்றிட காரணமாக அமைந்து விட்டது என்னவோ மறுக்க முடியாதது.
தற்போதைய இக்கட்டான நிலையில் நேற்று இரவோடு, இரவாக கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆறுதல் தெரிவித்திருப்பது ஒருபக்கம் சற்றே ஆறுதலை ஏற்படுத்தினாலும் கூட கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தினால் ஏழை தொழிலாளர்கள் எண்ணற்றவர்கள் மரணமடைந்த போது உடனடியாக அங்கே களத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறாத முதலமைச்சர் அவர்கள், தற்போது த.வெ.க விவகாரத்தில் உடனடியாக களத்திற்கு நேரில் சென்றது அரசியலாகவே தெரிகிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.