கனிமவள திருட்டு விசாரணை என்ற பெயரில் அப்பாவி விவசாயிகளின் மீது லட்சக்கணக்கில் அபராத தொகை விதிப்பதாக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோவையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எதிர்த்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதம்பட்டி, ஆலாந்துறை, மத்துவராயபுரம், தேவராயபுரம், வெள்ளிமலைப்பட்டினம், நரசிபுரம், இக்கரைபோளுவாம்பட்டி, தென்னமநல்லூர் மற்றும் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்களில் விவசாயிகள் கனிம வளத்தை திருடி விற்பனை செய்ததாக கூறி அவர்கள் மீது அபராத தொகை மற்றும் தண்ட தீர்வைத் தொகை ஆகியவை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாவட்ட மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏழை அப்பாவி விவசாயிகள் மீது லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதாகவும் விவசாய நிலங்களில் விவசாயத்திற்கு நிலத்தை சமப்படுத்துவதற்காக மண் எடுத்தாலும் அந்த விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கனிம வள கொள்ளையர்களுக்கு கனிமவளத்துறையினர் துணை போவதாகவும் குற்றம் சாட்டி அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு பழனிசாமி, மலைப்பகுதிகளில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டத்தில் விளை நிலங்களாக மாற்ற பூமிகளை சமம் செய்வது வழக்கம் எனவும் அதேபோல வடக்கிலிருந்து பூமிகள் தெற்கு நோக்கி குறிப்பாக நெய்யல் ஆற்றினை நோக்கி சரிவாகவும் அதேபோல தெற்கு பகுதியில் உள்ள பூமிகள் அனைத்தும் வடக்கு நோக்கி சரிவாகவும் இயற்கையாகவே அமையப்பெற்று இருப்பதால் அவ்வாறு அமையப்பட்ட பூமிகளை நாங்கள் விவசாயம் செய்வதற்காக சிறு சிறு பகுதிகளை பிரித்து ஏரிகள் அமைத்து மாற்றத்திற்கு தகுந்தாற்போல் நீர் பாசனம் செய்வதற்கு ஏதுவாக மாற்றியமைத்து உள்ளதாகவும் கூறினார்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு சொந்தமான விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு இதேபோல் பல கோடி ரூபாய் வரை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறையினர் அபராத விதித்துள்ளதாகவும் இந்த அபராத தொகையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியதுடன், இல்லாத பட்சத்தில் அடுத்த அடுத்ததடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான்