/indian-express-tamil/media/media_files/2025/09/11/tet-2025-09-11-18-15-41.jpg)
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 'டெட்' (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
சுமார் 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் தங்கள் பணி மற்றும் பதவி உயர்வு பாதிக்கப்படும் என கவலையடைந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு ஆசிரியர்களின் கவலைக்கு மதிப்பளித்து, சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, "நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் ஆசிரியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். முதல்வர் வெளிநாட்டில் இருந்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை வழங்கினார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராடி, சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
மேலும், "ஆசிரியர்களை ஒருபோதும் அரசு கைவிடாது. பள்ளிக் கல்வித் துறை எப்போதும் அவர்களுக்கு அரணாக இருக்கும்" என்றும் அவர் உறுதியளித்தார். ஏற்கெனவே, டி.ஆர்.பி. மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் டெட் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. தற்போது அரசின் இந்த முடிவு, ஆசிரியர்களுக்கு ஒரு நிம்மதியை அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், தமிழக அரசின் இந்த சீராய்வு மனு, ஆசிரியர்களின் பணியைப் பாதுகாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.