காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மே 14ம் தேதி மத்திய அரசு வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்தது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்களின் பதில்களை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த (மே 16) பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது காவிரி குழுவிற்கு “வாரியம்” என்று பெயர் வைக்க 4 மாநிலங்களும் ஒப்புக்கொண்டன. இதற்கு மத்திய அரசும் எவ்வித தடையும் தெரிவிக்கவில்லை. மேலும் ஒவ்வொரு மாநிலம் சார்பாகவும் கோரிக்கைகளை வைக்கப்பட்டது. இதில் ஒரு சில கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்த வழக்கில் மூன்று மாநிலங்களின் கோரிக்கைகளை விசாரித்த உச்சநீதிமன்றம், “காவிரி வரைவு திட்ட அறிக்கையில் உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள மாநிலங்களின் 3 கோரிக்கைகளைத் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்றது. இந்த வழக்கு விசாரணை நேற்று (மே 17) நடைபெற்றது. காவிரி குழு அமைத்தபின் இந்த விவகாரத்தில் தலையிட மத்திய அரசுக்கு அனுமதியில்லை.” என்று திட்டவட்டமாக உத்தரவு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, திருத்தங்கள் செய்யப்பட்ட காவிரி வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு நேற்று(மே 17) தாக்கல் செய்தது மத்திய அரசு. இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று (மே 18) மாலை 4 மணிக்கு வழங்கப்படும் என உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கர்நாடகம் மற்றும் கேரளாவின் கோரிக்கையை நிராகரித்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "காவிரி வழக்கின் தீர்ப்பில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. தண்ணீர் திறப்பதற்கான முழு அதிகாரமும் ஆணையத்திற்கே உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் ஒன்றுமில்லை. அதற்கு அதிகாரம் இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.