/tamil-ie/media/media_files/uploads/2020/10/doraikkannu-cm-palaniswami.jpg)
மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் பழனிசாமி இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் துரைக்கண்ணுவை நலம் விசாரித்தார்.
அமைச்சர் துரைக்கண்ணு, அக்டோபர் 14ம் தேதி முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு சேலம் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு சென்றுகொண்டிருந்தபோது, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அமைச்சர் துரைக்கண்ணு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், அமைச்சர் துரைக்கண்ணு ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே அமைச்சரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு இன்று எக்மோ கருவி மூலம் தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, ராயப்பேட்டையில் அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.