தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9 ஆம் தேதி அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை மத்திய அரசிடம் பெற வேண்டும்.
அத்துடன் மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காதது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
அவரது அறிவுரைக்கு இணங்க, மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காதது குறித்து கடந்த 25-ந்தேதி அன்று திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜனதா அரசைக் கண்டித்து
தி.மு.க. சார்பில் வருகிற 29 ஆம் தேதி காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா 2 அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
திமுக மாவட்ட நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் கட்சி முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்ட செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் மத்திய பாசிச பா.ஜ.க அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.