Advertisment

பெரியார், மணியம்மையார் குறித்த பேச்சு... ‘மலைத்த வேறுபாடு...’ வருத்தம் தெரிவித்த துரைமுருகன்

‘அழைத்துக் கொண்டு போனார்’ என்பதற்கும், ‘கூட்டிக்கொண்டு போனார்’ என்பதற்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன் என்று அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Durai

பெரியார், மணியம்மையார் குறித்த பேச்சு... ‘மலைத்த வேறுபாடு...’ வருத்தம் தெரிவித்த துரைமுருகன்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெற்ற தி.மு.க-வின் முப்பெரும் விழாவில், பெரியார் - மணியம்மையார் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது சமூக ஊடகங்களில் சர்ச்சையான நிலையில், அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisment

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற தி.மு.க-வின் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க-வின் முபெரும் விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இந்த விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் துரைமுருகன் தந்தை பெரியார் - மணியம்மை திருமணம் குறித்து பேசிய கருத்துகள், திராவிடக் கழகத்தினர் மற்றும் பெரியார் வாதிகள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில், பெரியார், மணியம்மை குறித்த தனது பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கட்சிக்கும், ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்துக்கும் இருந்த தொடர்புகள் குறித்து பேசிக்கொண்டு வரும்போது, ‘தி.மு.க தோன்றியதற்கே காரணம், வேலூர் மாநகரம்தான். வேலூருக்கு பிரசாரத்துக்கு வந்த தந்தை பெரியார், மணியம்மையார் வீட்டில் தங்குவது வழக்கம்’ என்பார்கள். மணியம்மையாருடைய கட்சிப் பணியைப் பார்த்த பெரியார், அவரை கட்சிப் பணி ஆற்றுவதற்காக உடன் அழைத்துச் சென்றார்.

‘எதிர்காலத்தில், கட்சியைக் காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்துவிட்டார்’ என்கிற வகையில், மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்துகொண்டார். ‘இது, பொருந்தா திருமணம்’ என்று அண்ணா, திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார்’ இதுதான் அன்றைய தினம் நான் பேசிய பேச்சின் சாரம்.

இதில் ஒரு தவறு எங்கே நடந்தது என்றால், ‘தந்தைப் பெரியார் மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்’ என்று சொல்ல வேண்டிய இடத்தில், ‘தந்தைப் பெரியார் மணியம்மையாரை கூட்டிக் கொண்டு போய்விட்டார்’ என்று பேசிவிட்டேன்.

‘அழைத்துக் கொண்டு போனார்’ என்பதற்கும், ‘கூட்டிக்கொண்டு போனார்’ என்பதற்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன். என்னுடைய இந்த பேச்சு, தமிழினத் தலைவர் அண்ணன் வீரமணிக்கும், தந்தைப் பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்கா பற்றுக்கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் என் பேச்சில், அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் இடத்திலும், ஆசிரியர் வீரமணியார் இடத்திலும், நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை வீரமணியாரே அறிவார்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Duraimurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment