சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. இவர் கடந்த 2006 முதல் 2010 வரையிலான தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, ஐ.பெரியசாமி சுமார் ₹2 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர், அவரது மனைவி சுசீலா மற்றும் மகன்கள் செந்தில் குமார், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இன்று இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், திண்டுக்கல் நீதிமன்றத்தின் விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தினார். இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.