தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்த த்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பால் பெரியசாமி பாதிக்கப்பட்டார். நேற்று காலை திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை வேறு ஒருவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“