மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையில் சில மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளையொட்டி நேற்று (பிப்ரவரி 24) சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஜெயலலிதா சிலை திறந்து வைக்கப்பட்டது.
ஜெயலலிதா சிலையை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி க.பழனிசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். ஆனால், சிலையில் உள்ள முகம் ஜெயலலிதாவின் முகத்தை போன்று இல்லை கடுமையாக சமூக தளங்களில் விமர்சிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலையை உருவாக்கும் பொறுப்பை ஹைதராபாத்தில் உள்ள சிற்பி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலை திறந்த பிறகு அந்த சிற்பிக்கு ஓ.பி.எஸ் பொன்னாடை போர்த்த, இ.பி.எஸ் தங்க மோதிரம் அணிவித்தார். இதனால், அதிமுக தலைவர்கள் கேலி, கிண்டலுக்கு ஆளானார்கள்.
இந்த நிலையில், ஜெயலலிதா சிலை குறித்து இன்று பேட்டியளித்த அமைச்சர் மீன்வளத்துறை ஜெயக்குமார், "அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் செய்வது குறித்து தலைமைக் கழகம் முடிவு செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.