கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை அதிகபட்சம் 88 ரூபாயையும், டீசல் விலை அதிகபட்சம் 77 ரூபாயையும் கடந்து சென்றுள்ளது. இதனால், சாமானிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு வாட் வரியை 4 சதவீதம் குறைத்தது. இதன் மூலம் பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைக்கப்படும் என்று மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்தார்.
அதேபோல், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையில் 2 ரூபாய் குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலைக் குறைப்பு நாளை மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரும். இந்த விலைக் குறைப்பால் அரசுக்கு ரூ.1,120 கோடி இழப்பு ஏற்படும் என்றாலும், மக்களின் சிரமங்களைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்தார். இதனால், தமிழக அரசும் உடனடியாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விலை குறைக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிக்கொண்டே போவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கலால் வரியை 50 சதவீதம் மத்திய அரசு குறைக்க வேண்டும். மத்திய அரசு வரிவருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு கொடுப்பதாக, மத்திய அமைச்சர் கூறியது தவறு. பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க தமிழக அரசுக்கு மனம் இருக்கிறது, ஆனால் போதிய நிதி இலலை. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தந்தால் விலையை குறைக்க குறைக்க முடியும். தமிழகத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் தரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.